இந்தியில் தயாராகும் அந்நியன் படத்துக்கு மீண்டும் சிக்கல்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் ஷங்கர் சமீபத்தில் அறிவித்தார்.
இந்தியில் தயாராகும் அந்நியன் படத்துக்கு மீண்டும் சிக்கல்
Published on

இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து ஷங்கர் கூறும்போது, அந்நியன் கதை என்னுடையது. எனவே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் கேட்க தேவை இல்லை'' என்றார். பட வேலைகளையும் தொடங்கினார்.

இந்த நிலையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தற்போது அறிவித்து உள்ளார். அந்நியன் இந்தி ரீமேக்கில் இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பார்கள் என்றும் தெரிவித்து உள்ளார். ஒரே படத்தை இரண்டு பேர் எடுக்க இருப்பதாக அறிவித்திருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com