

சென்னை,
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வரும் ராஷி கன்னா தற்போது பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ராஷி கன்னா பல பேட்டிகள் அளித்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அவர் நடித்த ‘தெலுசு கடா’ படம் குறித்து அவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவர் அதில் கூறுகையில்,
“‘தெலுசு கடா’ படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று எனக்கு படப்பிடிப்பு நடக்கும்போதே புரிந்துவிட்டது. எனக்கு பிடிக்காத பல விஷயங்களை படப்பிடிப்பு நேரத்தில் சொல்லியிருந்தேன். சில காட்சிகளை படமாக்கும்போது இது எனக்கு சரியாக இல்லை என்று தோன்றியது. ஆனாலும் இயக்குநர் நீரஜ் கோனா மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்தோம்.
கிளைமாக்ஸ் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால் அந்த ‘அறுவைச் சிகிச்சை’ காட்சியில் நடிக்க விரும்பவில்லை. ஆனால் இறுதியில் அது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அந்த படத்தின் மூலம் நாங்கள் அனைவரும் ஒரு பாடம் கற்றுக்கொண்டோம். என் கருத்தை இன்னும் வலுவாக சொல்லியிருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். படப்பிடிப்பு நேரத்தில் திரைக்கதை பல முறை மாறியது. அது என் கையில் இல்லை,” என்றார்.
ராஷி கன்னா கூறிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்த படத்தில் ஹீரோவாக சித்து ஜொன்னலகட்டா நடித்திருந்தார். மேலும் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.