விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்க இதுதான் காரணம் - ராகவா லாரன்ஸ்

"கடன்சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியதால், அவர்களுக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்தேன்" என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Published on

'சேவையே கடவுள்' என்ற பெயரில் அறக்கட்டளையை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லையாடி வருகை புரிந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அங்குள்ள பொதுமக்கள், ரசிகர்கள், மாணவ மாணவிகள், பெண்கள் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ்,"விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்திகள் தன்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்காக, உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன். இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை குறித்து அறிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அது எனக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

நடிகர் விஜய் எதை செய்தாலும் அதை சரியாக செய்வார். அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம். மக்கள் விஜய் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். விஜயும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com