ராஜமவுலியின் “வாரணாசி“ படத்தின் பாடல் அப்டேட்

ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருக்கும் என இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.
இயக்குநர்ராஜமவுலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘வாரணாசி’. இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையில் உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இசையமைப்பாளர் கீரவாணி “ரசிகர்கள் பிரமாண்டத்தை எதிர்பார்க்கலாம். வாரணாசி திரைப்படத்தில் இசை மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. எனக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. நீங்கள் செய்யும் பணியில் தெளிவும் உறுதியும் இருந்தால் உங்களுக்கு அழுத்தமே இருக்காது” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.






