20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

20 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
Published on

அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதை கடந்த பிப்ரவரி மாதமே உறுதி செய்து முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டனர். சமீபத்தில் படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்தனர் கதாநாயகியாக ஐஸ்வர்யாராய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று திரும்பிய ரஜினிகாந்திடம் இதுகுறித்து கேட்டபோது அடுத்து ஜெயிலர் படத்தில் நடிக்க போகிறேன் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது என்றும் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடிக்க இருப்பதாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இவர் வில்லன் வேடம் ஏற்கலாம் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக ரம்யா கிருஷ்ணன் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். ரஜினியுடன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்து 1999-ல் வெளியான படையப்பா படம் பெரிய வரவேற்பை பெற்றது. 2002-ல் வெளியான பாபா படத்திலும் சிறிய வேடத்தில் வந்தார்.

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரம்யா கிருஷ்ணன் தற்போது விஜய்தேவரகொண்டாவுடன் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com