சூரியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
சூரியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்
Published on

‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரசித்து, ரஜினிகாந்த் போனில் அழைத்து வாழ்த்தியது எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும் மிகமுக்கியமானது என்று சூரி கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’

தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

3 நாள்களில் ரூ. 30 கோடி வசூல்

‘மண்டாடி’ படம் உலக அளவில் 3 நாள்களில் ரூ. 30 கோடி வரை வசூலித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. சூரி கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம் அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மண்டாடி” படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்

இப்படத்தில் சூரியின் நடிப்புக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சூரியை போனில் வாழ்த்தியதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சூரியின் பதிவில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரசித்துள்ளார். அவரது மனமார போனில் அழைத்து வாழ்த்தியது எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும் மிகமுக்கியமானது. மறுமுனையில் அவரது குரலைக் கேட்ட அந்த விலைமதிப்பற்ற தருணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்” எனக் குறிப்பிட்டு அவரது படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும், “அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com