

சென்னை,
'ராமாயணம்' திரைப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து ரகுல் பிரீத் சிங் மனம் திறந்து பேசியுள்ளார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதில், யாஷ் நடித்த ராவணன் மற்றும் ரகுல் பிரீத் சிங் நடித்த சூர்ப்பணகை கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இதனையடுத்து, சூர்ப்பணகையாக நடித்தது குறித்து ரசிகர் ஒருவர் ரகுல் பிரீத் சிங்கிற்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியிருந்தநிலையில், அதற்கு, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், "சூர்ப்பணகை கதாபாத்திரத்திற்கு நான் சம்மதம் சொல்லக் காரணம், அந்த பாத்திரத்தின் ஆழம்தான். வரலாறு அவரை ஒரே ஒரு சம்பவத்திற்காக மட்டுமே நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் அவரது கதைக்கு பின்னால் இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
ஒரு நடிகையாக, மக்களின் பார்வையை மாற்றக்கூடிய மற்றும் சவால்கள் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிப்பதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. 'ராமாயணம்' வெளியாகும் போது, சூர்ப்பணகையின் கதையை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.