

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
இன்று காலை 10.10 மணிக்கு உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இருவரது திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் "ஒரு நாள், நான் அவளை மிகவும் தேடினேன். அவள் கூட இருந்திருந்தால் என் நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் வகையில் அந்தத் தேடல் இருந்தது.அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும் திருப்தியாகவும் இருந்திருக்கும் என்று தோன்றியது.அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது. நான் எங்கே இருந்தாலும், அந்த 'வீடு' போன்ற உணர்வையும் அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள்.அதனால், என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.