2.0 படத்தின் அடுத்த பாகம் தயாராகும் - டைரக்டர் ஷங்கர்

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ள 2.0 இன்று உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரைக்கு வருகிறது.
2.0 படத்தின் அடுத்த பாகம் தயாராகும் - டைரக்டர் ஷங்கர்
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடுகிறார்கள். இந்திய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்துள்ளனர்.

ரூ.600 கோடி வரை செலவிட்டு இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். 40 சதவீதம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படம் 3டியில் தயாராகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும் எந்திரனாகவும் இருவேடங்களில் வருகிறார். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு தணிக்கை குழு யு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

தொடர்ந்து 2.0 படத்தின் அடுத்த பாகமாக 3.0 படம் எடுக்கும் எண்ணம் உள்ளதா? என்று இயக்குனர் ஷங்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

2.0 படத்தின் அடுத்த பாகமாக 3.0 படம் எடுக்கும் திட்டம் உள்ளது. இது தொடர்பான சுவராஸ்யமான திட்டங்கள் உதித்துள்ளன. இந்தியன்-2 படப்பிடிப்பு முடிந்ததும் 2.0 படத்தின் அடுத்த அத்தியாயத்துக்கான கதையை எழுத தொடங்குவேன். ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தால்தான் அது சாத்தியம் ஆகும்.

சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினியை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிட்டி கதாபாத்திரத்தை விரும்புகிறார்கள்.

இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com