

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கிடையே, திமுக - அதிமுக கூட்டணி என்று பேச்சு எழுந்துள்ள சூழலில் அதற்கும் கடும் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரண் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, "தவெக கட்சி 108 இடங்களை வென்றுள்ளது. அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மறுப்பது, தமிழ்நாட்டு மக்களின் மக்கள் தீர்ப்பிற்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்களால் இன்னும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இயலாத நிலையில், இது மாநிலத்திற்கு இழைக்கப்படும் அவமானம் மட்டுமல்ல; ஜனநாயகத்திற்கே விழுந்த ஒரு பேரிடியும் ஆகும்." என்ற பதிவை அவர் பகிர்ந்துள்ளார்.