

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ், இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து புதிய படங்களை தயாரித்து வரும் லோகேஷ், சமீபத்தில் வெளியான ‘29’ திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்ப்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷால் வெங்கட், இந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தை, லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
படம் தொடர்பான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விவரங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை மையமாகக் கொண்ட இந்தப் புதிய முயற்சி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.