

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் விறுவிறுப்பாக உருவாகி, சமீபத்தில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்தது.
படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி காரணமாக, இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.