வாடகை பாக்கி விவகாரம்: யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு

வாடகை பாக்கி விவகாரம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் அளிக்கப்பட்டது. வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவை காலி செய்வதாக உரிமையாளர் ஜமீலா என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும் பலமுறை பணத்தை கேட்டும் தரவில்லை என்றும், போன் செய்தால் எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். அவர் அளித்திருந்த புகாரில், 2018 முதல் தான் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக வீட்டின் உரிமையாளர் ஜமீலாவுக்கு யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் பல ஆண்டுகளாக பிரபல இசையமைப்பாளராக உள்ள தன்னை பற்றி அவதூறாக தொலைகாட்சி சேனல்களில் ஜமீலா பேட்டி அளித்துள்ளார். இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே தனக்கு ரூ 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com