

சென்னை
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜனவரி 7-ம் தேதி வெளியாவதாக இருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பாதிப்புகள் குறைந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை மார்ச் மாதம் 18-ந்தேதி வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையெனில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும்' என்று தெரிவித்துள்ளது.