

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ருக்மினி வசந்த் தொடர்பாக, அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ உண்மையல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும் ருக்மினி வசந்த் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என வலியுறுத்திய அவர், சம்பவம் தொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தனது கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மர்மநபர்கள் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ருக்மினி வசந்த் அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 9 இன்ஸ்டாகிராம் பயனர்கள், 14 எக்ஸ் (X) தள பயனர்கள் மற்றும் 6 பேஸ்புக் பயனர்கள் என மொத்தம் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பி.என்.எஸ். சட்டப் பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.