

சென்னை,
தமிழ் திரையுலகில் புதுமையான இசை மொழியால் வேகமாக உயர்ந்து வரும் இசையமைப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் சாய் அபயங்கர். இன்டீ (indie)பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அண்மைக்காலத்தில் பல பெரிய படங்களுக்கும் இசையமைத்து தனது தடத்தை பதித்துள்ளார்.
சாய் அபயங்கர் இசையில் தற்போது 4 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், ‘கருப்பு’ திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்ததுடன் சாய்யின் இசையும் பெரிதாகக் கவனிக்கப்பட்டது. சொல்லப்போனால், சாய் இசையே படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இயக்குநர் அட்லி திரைப்படத்தின் இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.
சமீபத்தில் சாய் அபயங்கர் ‘பவழமல்லி’ என்ற இன்டீ பாடலை வெளியிட்டார். இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கர் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்காணோர் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர்.
இந்த நிலையில், ‘பவழமல்லி’ பாடல் வெளியான 91 நாள்களில் 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சாய் வெளியிட்ட அனைத்து ஆல்பங்கள் மில்லியன் கணக்கான ஹிட்ஸ் அடித்துள்ளதால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகியுள்ளார்.