சினிமா படப்பிடிப்பில் சமந்தாவை முயல் கடித்தது

சினிமா படப்பிடிப்பில் சமந்தாவை முயல் கடித்தது
Published on

நடிகை சமந்தா சாகுந்தலம் புராண படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறும்போது "எனக்கு மலர்கள் என்றால் அலர்ஜி. சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடித்தபோது பல சந்தர்ப்பங்களில் கையை சுற்றியும் கழுத்திலும் மலர் மாலைகளை போட்டுக் கொண்டதால் உடல் எல்லாம் தழும்புகள் வந்துவிட்டன.

முதல் நாள் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இரண்டாவது நாள் டாட்டூ மாதிரி காட்சியளிக்க ஆரம்பித்து விட்டது. ஆறு மாதங்கள் அவை அப்படியே மச்சங்கள் போல இருந்தது. சூட்டிங் சமயத்தில் அந்த மச்சங்கள் தெரியாமல் மேக்கப்புடன் கவர் செய்தேன். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் சகுந்தலை கதாபாத்திரத்திற்காக நானே சுயமாக டப்பிங் பேசினேன். அது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரிஜினல் வாய்ஸ் அவசியம் என்று சொன்னார்கள்.

படப்பிடிப்பின் போது என்னை ஒரு முயல் கடித்து விட்டது. செட்டில் நிறைய முயல்கள் இருக்கும். அவற்றில் ஒன்று என்னை கடித்து விட்டது.அதற்கு முன்பு வரை எனக்கு மிகவும் பிடித்திருந்த முயல்கள் அது முதல் பிடிக்காமல் போய்விட்டது'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com