

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளது. அந்நாட்டில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை முழுமையாக அழித்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.