

சென்னை,
'ஹாலிவுட்' படங்களை பார்த்து ஏக்கப்பட்டது போதும், தமிழில் அதுபோல முயற்சி செய்யலாமே... என்ற ரீதியில் 'சர்தார்-2' படத்தை கொடுத்துள்ளோம். ஒரு நல்ல சமூக கருத்து, விழிப்புணர்வு படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று நடிகர் கார்த்தி சர்தார் 2 படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சர்தார் 2'. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
'சர்தார் 2' படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
'சர்தார்-2' படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதுகுறித்து கார்த்தி கூறும்போது, 'சர்தார்' படத்தின் தொடர்ச்சியாக, இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் முந்தைய நிகழ்வுகளும், பிந்தைய நிகழ்வுகளும் உள்ளடங்கிய படமாக 'சர்தார்-2' இருக்கும். 'ஹாலிவுட்' படங்களை பார்த்து ஏக்கப்பட்டது போதும், தமிழில் அதுபோல முயற்சி செய்யலாமே... என்ற ரீதியில் 'சர்தார்-2' படத்தை கொடுத்துள்ளோம்.
ஒரு நல்ல சமூக கருத்து, விழிப்புணர்வு படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயத்தை எனக்கு கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனனும், ஆஷிகா ரங்கநாத்தும் நடிப்பு தாண்டி ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்ஷன் விருந்தாக இருக்கும். சமீபத்தில் கூட பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் கொண்டு வருவதை பார்த்து எஸ்.ஜே.சூர்யா கோபத்தில் கத்தும் வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதுபோல பிளாஸ்டிக் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை படம் ஏற்படுத்தும், என்றார்.