நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை

மகாராஷ்டிரா, ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது தொடர்பாக நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது. #PriyaPrakashWarrier #PriyaVarrier #SupremeCourt
நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
Published on

புதுடெல்லி

மலையாளத்தில் தயாராகும் ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலரய பூவி பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த பாடலில் உள்ள வரிகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி, அதில் நடித்துள்ள பிரியா வாரியர் மீதும், படத்தின் டைரக்டர் ஒமர் லூலு மீதும் ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மும்பை போலீஸ் கமிஷனரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலத்திலும் வழக்கு பதிவாகி உள்ளது. இதனை எதிர்த்து பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் கேரளாவில் 40 வருடங்களாக பாடப்பட்டு வருகிறது. பாடல் வரிகள் திடீரென மத உணர்வுகளை புண்படுத்தி விடாது. பாடல் வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆதாரமற்ற புகார்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது சட்டமீறல். கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுவித்ததுபோல் இந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. மலையாளப்பட நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளது. மகாராஷ்டிரா, ஹைதராபாத்தில் போலீஸ் நிலையத்தில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை கூடாது என சுப்ரீம் கோட்டு உத்தரவிட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com