

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் மறைவை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சங்கத்தின் தேர்தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும் சேரன் தலைமையில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ என்ற அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் கே.பாக்யராஜ் பெயரிலேயே போட்டியிடுகின்றன.
பொதுச்செயலாளர் பதவிக்கு மனோஜ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலிகான், ஆர்.சுந்தர் ராஜன், 2 பேர் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு, யார் கண்ணன், சமுத்திரக் கனி, சினேகன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 4 பேர் கொண்ட இணைச் செயலாளர் பதவிக்கு 8 பேரும் 12 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் இந்த தேர்தலின் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் ஒரு ஜனநாயகத் திருவிழாவாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள், தேர்தலின் நம்பகத்தன்மையையும், உறுப்பினர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையும் கடுமையான கேள்விக்குறியாக்கியுள்ளன.
என் சந்தா நிலுவையில் இருந்தபோது, வேட்பாளர் கே.பி .பி. நவீன் அவர்கள் என் சார்பாக அந்தத் தொகையைச் செலுத்தினார். என் 30 ஆண்டுகால நண்பர் என் திரைப்படங்களின் நடித்தவர். அசோசியேட் ஆக வேலை செய்தவர். அதற்காக சொன்னார் சரி நீங்கள் கட்டி விடுங்கள் நான் வந்து விடுகிறேன் என்றேன்.அதற்கான தொகையை நான் அவரிடம் உடனடியாக வழங்கிவிட்டேன். இது எங்களின் தனிப்பட்ட புரிதல் மற்றும் உரிமை.
ஆனால், இந்தச் சந்தாவை செல்லாது என்று கூறி, என் அனுமதி இன்றி அந்தத் தொகையைத் தன்னிச்சையாக 'நலநிதி'க்கு மாற்றிவிடுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது எவ்வகையிலும் நியாயமற்றது. எந்த விதியின் கீழ், ஒரு உறுப்பினர் செலுத்தும் சந்தாப் பணத்தை, அந்த உறுப்பினரின் அனுமதியின்றி தேர்தல் அதிகாரி இப்படித் தன்னிச்சையாகத் திசைதிருப்ப முடியும்? இது வாக்களிக்கும் உரிமையைத் திட்டமிட்டுப் பறிக்கும் ஒரு செயல்.
இந்தத் தேர்தல் நடைமுறைகளில் தேவையற்ற அரசியல் அத்துமீறல்கள் இருப்பதாகப் பல உறுப்பினர்கள் கருதுகின்றனர். எழுத்தாளர் சங்கம் என்பது தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இடமல்ல, அது கலைஞர்களின் ஜனநாயக அமைப்பு. எனவே, தேர்தலைச் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்த, தற்போதைய தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும். சங்கங்களின் பதிவுத்துறை (Registrar of Societies) இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். மூத்தவர்கள் பாக்கியராஜ் போன்றவர்கள் வழி நடத்திய எழுத்தாளர் சங்கத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.