தூத்துக்குடி அருகே பரபரப்பு: நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு

மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடிகை தீபாவின் தந்தையை வெட்டினர்.

தூத்துக்குடி அருகே பரபரப்பு: நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (வயது 67). இவரது மகள் தீபா. இவர் சின்னத்திரை நடிகை ஆவார். சில நாடகங்கள், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் புலவர் கணேசன் நேற்று மாலை முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புலவர் கணேசனை சரமாரி வெட்டினர்.

இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த ஒருவர் தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள், அந்த நபரையும் வெட்டினர். இதில் அவருக்கும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com