

சென்னை,
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், உங்கள் கனவுகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து, தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ராஜ் நிடிமோரு கதை எழுதிய ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
‘எங்கள் தங்கம்’ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட சமந்தா, தான் கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனவுகளை நோக்கி பயணிப்பது குறித்து ஊக்கமளிக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனக்கு நானே அளித்துக்கொண்ட 1000 நாள் உறுதிமொழியின் 484-வது நாள் இது. இன்னும் நிகழாத ஒரு வாழ்க்கையை எழுத்து வடிவில் பதிவு செய்வதில் ஒரு வலிமை இருக்கிறது. என் பட்டியலில் இருந்த சில விஷயங்கள் மிகவும் பிரம்மாண்டமானவை. அவற்றை எழுதும்போது எனக்கே அவை முட்டாள்தனமாகத் தோன்றின. இருப்பினும், அவற்றை எழுதினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இப்போது திரும்பிப் பார்க்கும்போது, சாத்தியமற்றதாகத் தோன்றிய அந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கையாக மாறியிருப்பதை என்னால் காண முடிகிறது” என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
கனவுகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து, தேவையற்ற விஷயங்களைத் தவிர்த்து முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, கனவுகளை பதிவு செய்து வைத்திருப்பதன் சிறப்பு குறித்து பகிர்ந்த சமந்தா, ஆரம்பத்தில் ஒரு விஷயத்தை தீவிரமாக விரும்பியும் அதை அடைவோம் என்று நம்பத் தயங்கிய பழைய தன்னை மீண்டும் சந்திக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
“பிறகு உணர்வது... அவள் அதைச் சாதித்துவிட்டாள் என்பதை” என்று குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய வாழ்க்கைச் சூழலைக் காட்டிலும் பெரிதாக கனவு காண வேண்டும் என்றும், குறிப்பாக மற்றவர்களுக்கு அது முட்டாள்தனமாகத் தோன்றினாலும் தங்கள் கனவுகளை நம்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.