

லாஸ் ஏஞ்சல்ஸ்,
உலகப் புகழ்பெற்ற மறைந்த பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான 'மைக்கேல்' (Michael) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர் மீது மீண்டும் எழுந்துள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கேல் ஜாக்சனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும், அவரது "இரண்டாவது குடும்பம்" என்றும் அறியப்பட்ட காசியோ (Cascio) குடும்பத்தினர் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளனர். ஜாக்சன் தங்களைக் குழந்தைகளாக இருந்தபோது பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறு வயதில் தங்களுக்குப் பரிசுகள் வழங்கி, மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்து ஜாக்சன் தவறாக நடந்துகொண்டதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளை ஜாக்சன் தரப்பு வழக்கறிஞர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.
ஜாக்சன் சொத்து நிர்வாகத்தின் வழக்கறிஞர் மார்ட்டி சிங்கர் இது குறித்துக் கூறுகையில், "இந்த வழக்கு வெறும் பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கீழ்த்தரமான முயற்சி . 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாக்சனின் நேர்மைக்குச் சாட்சியாக இருந்தவர்கள், இப்போது கோடிக்கணக்கான டாலர்களைக் குறிவைத்து பொய்களைக் கூறுகின்றனர்" என்றார்.