

மும்பை,
இந்தி திரையுலகில் பழம்பெரும் நடிகையான 69 வயது நிறைந்த சபானா ஆஸ்மி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் விருதுகள், சர்வதேச விருதுகள் மற்றும் பிற விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் நேற்று மாலை அவர் சென்று கொண்டிருந்துள்ளார். மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே சென்றபொழுது அவரது கார், லாரி ஒன்றின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஆஸ்மிக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என கூறிய மருத்துவர்கள், ஆஸ்மி சீரான நிலையில் இருக்கிறார். எனினும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர் இருந்து வருகிறார் என தெரிவித்தனர்.
ஆஸ்மியுடன் அவரது கணவர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார். இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விவகாரத்தில் நடிகை சபானா ஆஸ்மியின் கார் ஓட்டுனர் ஆம்லேஷ் யோகேந்திரா குமார் என்பவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆஸ்மியின் கார் ஆனது லாரியின் பின்புறம் மோதியுள்ளது. இதில் லாரி சேதமடைந்து உள்ளது. இதுபற்றி லாரி ஓட்டுனர் ராஜேஷ் பாண்டுரங் ஷிண்டே போலீசில் புகார் அளித்து உள்ளார். இதன்படி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். ஓட்டுனர் வேகமுடன் கார் ஓட்டியதில், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது என அதில் பதிவாகியுள்ளது.