

மும்பை,
இந்தி நடிகர் அமீர்கான், கடந்த 5-ந்தேதி மும்பை பாந்திரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அழகுக்கலை நிபுணர் கவுரி ஸ்ப்ராட் என்பவரை 3-வது திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பாக அவர் ரீனா தத்தா மற்றும் திரைப்பட இயக்குனர் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்திருந்தார்.
இந்தி நடிகர் அமீர்கானின் 3-வது திருமணம் குறித்து மந்திரி நிதேஷ் ரானே கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது. இந்து சமூகம் அதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்றும், அமீர்கானின் இந்த 3-வது திருமணத்தை ஏன் 'லவ் ஜிகாத்' என்று பார்க்கக்கூடாது என்றும் பா.ஜனதா மூத்த தலைவரும், மாநில மந்திரியுமான நிதேஷ் ரானே கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான சஞ்சய் சிர்சாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"மந்திரி நிதேஷ் ரானேயின் கருத்து ஒரு வகையில் சரியானதுதான். நான் நிதேஷ் ரானேவின் கருத்தை ஆதரிக்கிறேன். பொதுமக்கள் உங்களை (அமீர்கான்) ஒரு சிறந்த நடிகராக பார்க்கிறார்கள். நீங்கள் ஒரு பெரிய நட்சத்திரம் என்று நினைக்கிறார்கள். ஆனால். இந்த நட்சத்திரம் ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, தற்போது 3-வது முறையாக திருமணம் செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களின் மூலம் மக்கள் அவரிடம் இருந்து என்ன கற்றுக்கொள்வார்கள்?. அவர் வேண்டுமானால் லவ் ஜிகாத்தின் விளம்பர தூதராக மாறலாம். ஆனால், சாதாரண பொதுமக்களின் இதயங்களில் அவரால் ஒருபோதும் வாழமுடியாது." இவ்வாறு அவர் கூறினார்.