

தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மருத்துவ பின்னணியிலான 'ஹார்ட் பீட்' வெப் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது உருவாகி வருகிறது. உணர்வுப்பூர்வமான கதை, வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரித்த இந்த தொடர், வெளியான முதல் சீசனிலிருந்தே ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான 'ஹார்ட் பீட்' முதல் சீசன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது சீசனும் வெற்றிகரமாக ஓடியது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி பேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் இந்த தொடரின் மூன்றாவது சீசனிலும் அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
முதல் இரண்டு சீசன்களில் தேஜஸ்ரீ (தேஜு) கதாபாத்திரத்தில் நடித்த நடிகை யோகலட்சுமி, 'ஹார்ட் பீட்' மூன்றாவது சீசனில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனுடன், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தனது பதிவில், "இந்த செய்தியை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். உண்மையிலேயே வருந்துகிறேன். இனி நான் 'ஹார்ட் பீட்' தொடரின் ஒரு பகுதியாக இருக்கப்போவதில்லை. இது எனக்கும் எளிதான முடிவு அல்ல. ஆனால், இந்த வாய்ப்புக்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. 'தேஜு' கதாபாத்திரம் எப்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய 'ஹார்ட் பீட்' படக்குழுவினருக்கும், தொடக்கம் முதல் தன்னை ஆதரித்து வந்த ரசிகர்களுக்கும் யோகலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் அன்பும் ஆதரவும் தனது வாழ்நாள் முழுவதும் மனதில் இருக்கும் என்றும் அவர் தனது உருக்கமான பதிவில் குறிப்பிட்டுள்ளார்.