

சென்னை,
ஆசையாக வளர்த்து வந்த தனது செல்ல பூனையை அதன் பழைய உரிமையாளரிடமே மீண்டும் ஒப்படைத்துள்ளதாக ஸ்ருதி ஹாசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பூனையை வீட்டிற்கு கொண்டு வந்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அவரது முகம் முழுவதும் கடுமையான தடிப்புகளும் கொப்புளங்களும் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் அதிகமாக மாம்பழங்கள் சாப்பிட்டதால் இவ்வாறு ஏற்பட்டதாக நினைத்ததாகவும், பின்னர் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபோதுதான் பூனையின் உரோமம் மற்றும் உமிழ்நீரால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்ததாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
இதனை சரி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக கூறிய அவர், இருப்பினும், எந்த முயற்சியும் பலனளிக்காததுடன், ஒவ்வாமை மருந்துகளாலும் கொப்புளங்கள் குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இறுதியில் பூனையை அதன் பழைய உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிகை மட்டுமின்றி பாடகியாகவும் வலம் வரும் அவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். விஜயுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியின் டிரெயின் படத்தில் நடித்துள்ளார்.