

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சுருதி ஹாசன், தனது நடிப்புத் திறமையுடன் மட்டுமல்லாமல், இசை உலகிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார். பின்னணி பாடகியாக பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ள அவர், தனிப்பட்ட இசை ஆல்பங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் சாய் அபயங்கர் வெளியிட்ட ‘பவழ மல்லி’ இசை ஆல்பத்தில் தனது குரலால் முத்திரை பதித்தார்.
சினிமா, இசை என பல துறைகளில் பிஸியாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைக்காமல் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதில் சுருதி ஹாசன் எப்போதும் தனித்துவம் காட்டி வருகிறார். காதல் தொடர்பான விஷயங்களிலும் அதே நேர்மையை பின்பற்றும் அவர், தனது கடந்த உறவுகள் குறித்து ரசிகர்களிடம் முன்பே திறந்த மனதுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது காதல் அனுபவங்களை பற்றி மீண்டும் மனம் திறந்தார். அதில் அவர், "என் வாழ்க்கையில் காதல்கள் வந்துள்ளன. அந்த காதல்கள் காயங்களாகவே முடிந்திருக்கின்றன. இப்போது காயங்கள் ஆறி, அமைதியை தேர்வு செய்திருக்கிறேன். இப்போதைய எனது விருப்பமும், தேடலும் தனிமை மட்டுமே. இந்த தனிமையில் நான் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன்”, என்று குறிப்பிட்டார்.