

சென்னை,
கேரளாவில் இருந்து வந்த நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், மலையாளம் தாண்டி தமிழில் 'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா, நிழலா', 'பேய் மாமா' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022-ம் ஆண்டில் ஆதிராஜன் இயக்கத்தில் 'அருவா சண்ட' படத்தில் மாளவிகா மேனன் நடித்திருந்தார்.
இதற்கிடையில் மீண்டும் ஆதிராஜன் இயக்கத்தில் 'சிலந்தி-2' படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 2008-ம் ஆண்டில் இயக்கிய 'சிலந்தி' படத்தின் 2-ம் பாகமாக 'சிலந்தி-2' படத்தை ஆதிராஜன் இயக்கவுள்ளார்.
ஆதிராஜன் கூறும்போது, “இது எனது 5-வது படம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என 6 மொழிகளில் மிரட்டல் திரில்லர் படமாக உருவாகிறது. மாளவிகா மேனன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னணி நடிகர் - நடிகைகள் இணையவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் நாடுகளில் நடைபெற உள்ளது. 'லோகா', 'காந்தாரா' போன்று இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கு மேல் இடம்பெறுகிறது”, என்றார்.