சிம்புவின் "எஸ்டிஆர் 51" படப்பிடிப்பு அப்டேட்

சிம்பு நடிக்கும் ‘காட் ஆப் லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 3 புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில், அடுத்ததாக சிம்பு 'பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
அதனைதொடர்ந்து, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகாக 'எஸ்டிஆர் 51' என பெயரிடப்பட்டிருந்த நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நிகழ்வொன்றில் பேசும்போது, "எஸ்டிஆர் 51 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. படத்தின் கதையே மிக சுவாரஸ்யமானது. எஸ்டிஆரின் ரசிகர்களுக்கு பயங்கர திருப்தியான படமாகவே அமையும். கதாநாயகி உறுதிசெய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து அப்டேட்கள் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.






