

சென்னை,
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன், தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பாலு சர்மா இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு 'டீச்சர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் ஒரு முழுநீள கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'வாலி', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஜோடி', 'பிரியமானவளே', 'பஞ்சதந்திரம்' எனப் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்தவர் சிம்ரன். முன்னணி கதாநாயகியாக இருந்த அவர், தற்போது கதையின் நாயகியாகவும், முக்கியத்துவம் வாய்ந்த துணை கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் அவரது நடிப்பிற்குப் பாராட்டுகள் குவிந்தன.