‘அண்ணி’ என்று அழைக்கப்படும் ரோமன் அழகி

திருமணத்தில் ஆர்வமே காட்டாதவர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். அவருக்கு தோழியாக, அவருடனே வசித்து வருபவர் ரோமன் நாட்டு பேரழகி லூலியா.
‘அண்ணி’ என்று அழைக்கப்படும் ரோமன் அழகி
Published on

திருமணத்தில் ஆர்வமே காட்டாதவர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். அவருக்கு தோழியாக, அவருடனே வசித்து வருபவர் ரோமன் நாட்டு பேரழகி லூலியா. அவரை பின்னணி பாடவைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார், சல்மான்கான்.

நான் ரோமில் தொலைக்காட்சி தொடர் களில் நடித்திருக்கிறேன். மாடலிங் செய்திருக்கிறேன். நன்றாக பாடவும் செய்வேன் என்று கூறும் லூலியா, குரல் வளம் கொண்டவராக திகழ்கிறார்.

சல்மான்கான் நடித்த பாடிகார்ட் என்ற படத்தில் தேரே மேரே ப்ரேம் கஹானி என்ற பாடல் உண்டு. அதன் சாயலில் லூலியா ஒரு ரோமானியப் பாடலைப் பாடி வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, லூலியாவின் குரல் வளத்திற்கு புகழைப் பெற்றுக்கொடுத்தது. அந்த பாடல் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பாடக்கூடியது. அதை அவர் பாடி, தந்தைக்கு தனது கிறிஸ்துமஸ் பரிசாக அனுப்பிவைத்தார். பிரபல இந்தி பின்னணி பாடகர் ஹிமேஷ் காதுகளில் அந்த பாடல் விழ, அதை மெய்மறந்து ரசித்த அவர், சல்மான்கானிடம் பாடலை புகழ்ந்து தள்ளினார்.

லூலியாவின் குரல்வளம் சல்மானுக்கும் பிடித்திருந்தது. அதனால் எவ்ரி நைட் அண்ட் டே.. என்ற இந்திப் பாடலை பாடுவதற்கான வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்தார். அந்த பாடலை வெளியிட்டு பேசிய ஹிமேஷ், லூலியாவை எக்கச்சக்கமாக புகழ்ந்தார்.

இது ஒரு இந்திப் பாடல். லூலியா சிரமப்பட்டுதான் பாடினார். ஆனால் பொறுப்போடு பாடி முடித்தார். பாடலை அவர் பாடி முடிக்க இரண்டு மணிநேரம் தேவைப்பட்டது. நம்பிக்கையோடு அழகாகப் பாடினார் என்றார்.

லூலியாவுக்கு முறைப்படி இந்தி பேச கற்றுக்கொடுக்க, சல்மான்கான் ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறார். அவரால் இந்தியை எளிதாக கற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனாலும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்.

எனக்கு இந்தி கற்றுக்கொடுப்பது, அந்த ஆசிரியருக்கு கடினமாகத்தான் இருக்கிறது. நானும் கஷ்டப்பட்டுதான் கற்றுக்கொள்கிறேன். இந்திய மொழியை இந்தியர்கள் கற்பதற்கும், வெளிநாட்டு பெண்ணான நான் கற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே பாலங்கட்டி இணைப்பது போன்றுதான் இந்த வேலை நடக்கிறது. ஆனாலும் மற்றவர்கள் இந்தி பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஓரளவு பதில் சொல்லவும் முடிகிறது. அந்த தடுமாற்றம் இன்னும் சிறிது காலத்தில் நீங்கிவிடும் என்று சிரித்துக்கொண்டே நம்பிக்கையோடு சொல்கிறார், லூலியா.

இவரை பலரும் அண்ணி என்று அழைக் கிறார்கள். சல்மான்கான் முன்பு வைத்து அண்ணியை ஆகாஓகோ என்று புகழ்ந்துதள்ளுகிறார்கள். கண்டபடி ஐஸ்வைக்கிறார்கள்.

சல்மான்கானிடம், லூலியாவின் குரல்வளம் பற்றி கேட்டால்.. லூலியா முறைப்படி சங்கீதம் கற்று, அவரது நாட்டில் பாடிக் கொண்டிருந்தவர். தொழில்முறை பாடகி. அதனால்தான் இவ்வளவு சிறப்பாக அவரால் பாட முடிந்தது. என்னைப் பற்றியும், அவரைப் பற்றியும் எழுந்த வம்பு வழக்குகளை மீறி நான் அவரை என் பாதுகாப்பில் தங்க வைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்.

குரல் மூலம் சிறப்பை பெற்றிருக்கும் இவர் உடல் மூலம் சிறப்பு பெற நடிக்கவும் செய்வாரா? என்று கேள்வி எழுப்பியபோது,

வருங்காலம் எப்படி வழிவிடும் என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் இருந்தே பாடிக்கொண்டிருக்கிறேன். இந்திப் பாடலையும் ரொம்ப ரசித்துப்பாடினேன். ஹிமேஷூடன் சேர்ந்து பாடியது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். என் குரலை மதிப்பவர் அவர்.

ரோமில் நான் பல துறைகளில் கால் பதித்து சுழன்றுகொண்டிருந்தேன். எந்த திட்டமும் இல்லாமல் நான் வந்தேன். சல்மான் காட்டிய வழியில் நடந்துகொண்டிருக்கிறேன். அவர் தான் எனது வழிகாட்டி. அவர் திறமைசாலிகளை ஊக்குவிப்பவர். என்னை மட்டுமல்ல என்னை போன்ற பலரையும் அவர் ஊக்குவித்திருக் கிறார்.

நான் பெண் என்பதால் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த சர்ச்சைகள் எங்களை போன்றவர்களால் தவிர்க்க முடியாத ஒன்று. இதற்கெல்லாம் பயந்து ஓடி விடாதே என்று சல்மான் சொன்னார். அவர் கருணைமிக்கவர். அவர் மிக சிறந்தவர் என்பதை அவர் அருகில் இருப்பவர்களால்தான் உணர்ந்துகொள்ள முடியும். நிறைய சமூக சேவைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.

என்னை இங்கே அழைத்துவரும் முன்பு அவர், என் பெற்றோரிடம் பேசினார். உங்கள் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பிறகு தான் என் பெற்றோர் என்னை இந்தியாவிற்கு அனுப்பிவைத்தார்கள். இங்கு எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்பதால் சல்மான் வீட்டில் தங்கி இருக்கிறேன். சிறுவயது முதலே எனக்கு இந்தியா பிடிக்கும். என்றாவது ஒரு நாள் இந்தியா வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்படி அதிர்ஷ்டத்தோடு தேடிவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்கிறார் லூலியா.

இப்போது சல்மானும், லூலியாவும் கைகோர்த்து ஊர் சுற்றிக்கொண்டிருக் கிறார்கள். சல்மான் குடும்பத்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் லூலியா கலந்துகொள் கிறார். சல்மானின் நலனுக்காக விசேஷ பிரார்த்தனைகளையும் செய்கிறார். சல்மானின் குடும்பத்தினரும் அவரை அண்ணி என்றே அழைக்கிறார்கள்.

அப்படியானால் உங்களுக்குள் திருமணம் நடந்துவிட்டதா? என்று கேட்டால், நான் ஏன் ரகசிய திருமணம் செய்துகொள்ளவேண்டும்? என் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை. இதில் எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. சமூகத்தைக் குழப்பக்கூடாது என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

ரோமில் உள்ள லூலியாவின் குடும்பத்தினர் அவரை மிஸஸ் கான் என்று தெள்ளத்தெளிவாக அழைக்கிறார்கள். இங்குள்ளவர்கள்தான் அண்ணிக்கு அர்த்தம் தெரியாமல் தவிக்கிறார்கள்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com