

சென்னை,
இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள். கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அமரன்' திரைப்படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
'அமரன்' திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது. இந்த விருதுகள் படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழ் சினிமாவிற்கும் மேலும் ஒரு தேசிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அமரன் குடும்பத்துக்கே இது ஒரு சிறந்த நாளாக அமைந்துள்ளது. சிறந்த இயக்குநர் விருது பெற்ற ராஜ்குமார் பெரியசாமிக்கும் சிறந்த பின்னணி இசைக்கான விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் சிறந்த படத்தொகுப்புக்கான விருது பெற்ற ஆர். கலைவண்ணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தேசிய விருதுகளை வென்ற தனுஷ், அனல் அரசு, அருண் மாதேஸ்வரன்,சுரேன் ஜி, சச்சனாமிடாஸ், ஹரிஹரசுதன், எட்மண்ட்ரான்சன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.