மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை,
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர்(வயது 46). காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.
இதனிடையே, ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 09.05 மணியளவில் உயிரிழந்தார்.ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திரை பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.






