

சென்னை,
‘மாவீரன்’ படத்தின் மூன்றாம் ஆண்டையொட்டி படக்குழு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
‘மண்டேலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படத்தை இயக்கினார். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது.
இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், நடிகர் விஜய் சேதுபதி தனது குரலால் 'அசரீரி' கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
விமர்சன ரீதியாகவும் கமர்ஷியலாகவும் மாபெறும் வெற்றிப் பெற்ற படமாக ‘மாவீரன்’ மாறியது. ரூ.90 கோடி வசூலித்த மாவீரன் திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்திருந்தது. இந்தப்படம் கடந்த 2025ல் ஜப்பானில் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘மாவீரன்’ படத்தின் மூன்றாம் ஆண்டையொட்டி படக்குழு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் ஷாந்தி டாக்கீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “மாவீரனின் மூன்றாம் ஆண்டு. எடிட்டுகள், ரசிகர்களின் போஸ்டர்கள் மூலம் நெகிழ வைத்த அனைவருக்கும் நன்றிகள். வீரன் மக்களின் / ரசிகர்களின் அன்பு மழையில் நனைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளது.
முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்க சிவகார்த்திகேயனும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனினும், தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது பிற படங்களில் பிஸியாக இருப்பதால், ‘மாவீரன் 2’ படத்தின் பணிகள் 2028-ஆம் ஆண்டில்தான் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.