

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மேலும், நடிகர் ஆர்யா தன் கட்டுமஸ்தான தோற்றப் புகைப்படங்களை வெளியிட்டு கிளைமேக்ஸுக்கு தயாராகி வருவதாகக் கூறியிருந்தார்.
வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சோபிதா துலிபாலா, “வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படமாக இருக்கும். இயக்குநர் பா. இரஞ்சித் சில பகுதிகளை சயின்ஸ் பிக்ஷன் பாணியிலும் படமாக்கி வருகிறார். வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் சுவாரஸ்யமான படமாகவே வேட்டுவம் உருவாகி வருகிறது” என கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா திருமணம் கடந்த 2024 டிசம்பரில் நடைபெற்றது.