'ராமர் கோவிலுக்கு துர்புத்தி உள்ள சிலர் வரவில்லை' - நடிகை கங்கனா ரணாவத்

ராமர் கோவில் விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரணாவத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
'ராமர் கோவிலுக்கு துர்புத்தி உள்ள சிலர் வரவில்லை' - நடிகை கங்கனா ரணாவத்
Published on

அயோத்தி,

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் 'சந்திரமுகி 2' திரைப்படமும் மற்றும் இந்தியில் 'தேஜஸ்' திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு 'மணிகர்ணிகா பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இவர் தயாரித்த டிக்கு வெட்ஸ் சிரு திரைப்படமும் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்-ஆக இருக்கும் கங்கனா அவ்வப்போது சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரணாவத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தரும் மக்கள், நிறைய புண்ணியங்களைப் பெறுகிறார்கள். வாடிகன் நகரத்திற்கு உலக அளவில் முக்கியத்துவம் உள்ளதைப் போல, அயோத்தி ராமர் கோவிலும் நமக்கு முக்கியமானது.

அயோத்திக்கு வந்து ராமரை வழிபடுவது நமக்கு கிடைத்த பாக்கியம். ராமரின் கோவிலுக்கு 'துர்புத்தி' உள்ள சிலர் வரவில்லை. ஜனவரி 22-ந் தேதி 'ராமராஜ்யம்' மீண்டும் நிறுவப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com