

தெஹ்ரான்,
அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், துபாயில் சிக்கியிருக்கும் தன்னை மீட்க உதவி செய்ய வேண்டும் என பிரபல நடிகை சோனல் சவுகான், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது டுவீட் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மூண்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்களை தகர்க்கும் வகையில் துபாயின் பல இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பலர் துபாயில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், தன்னை மீட்க உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நடிகை சோனல் சவுகான் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, நடந்து கொண்டிருக்கும் போர் சூழலில் நான் துபாயில் சிக்கி இருக்கிறேன். விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவுக்கு திரும்புவதற்கான எந்த வழியும் இல்லை. பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் அரசின் வழிகாட்டுதல்களை நாடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.