

இந்திய திரையுலகில் கனவு கன்னியாக கொடி கட்டிப்பறந்த நடிகை ஸ்ரீதேவி, 2018-ல் துபாயில் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது சாவில் ரசிகர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இப்போதுவரை இருக்கிறது. கணவர் போனிகபூரையும் சந்தேகித்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீதேவி மரணத்தின் பின்னணி உண்மைகள் குறித்து போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "திரையில் அழகாக காட்சியளிக்க ஸ்ரீதேவி கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருப்பார். உப்பு இல்லாத உணவையே சாப்பிட்டு வந்தார். இதனால் பலமுறை சோர்வடைந்து தலை சுற்றலுடன் கீழே விழுந்து இருக்கிறார்.
ரத்த அழுத்தம் குறைவு பிரச்சினையும் இருந்தது. டாக்டர்கள் எச்சரித்தும் அதை சீரியசாக அவர் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஸ்ரீதேவி இயற்கையாக மரணம் அடையவில்லை. தவறி விழுந்துதான் இறந்தார். அந்த நேரத்தில் துபாய் போலீசார் என்னை ஒரு நாள் முழுவதும் விசாரித்தார்கள். எனக்கு உண்மை கண்டறியும் சோதனையும் செய்தார்கள். இறுதியில் குளியல் தொட்டியில் தவறி விழுந்துதான் இறந்தார் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஸ்ரீதேவி இறந்த சில நாட்களுக்கு பிறகு நடிகர் நாகார்ஜூனா என்னை சந்தித்தார். ஒருமுறை அவரோடு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தபோது கடுமையான உணவு கட்டுப்பாடு இருந்து படப்பிடிப்பில் சுய நினைவிழந்து கீழே விழுந்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்'' என்றார்.