அந்நியன் திரைக்கதை எனக்கே சொந்தம்; எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது- டைரக்டர் ஷங்கர்

அந்நியன் திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது என டைரக்டர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.
அந்நியன் திரைக்கதை எனக்கே சொந்தம்; எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது- டைரக்டர் ஷங்கர்
Published on

சென்னை

டைரக்டர் ஷங்கர் தனது இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்த அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாகவும் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் அனுப்பி உள்ள நோட்டீசில், அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறவில்லை. அந்நியன் படத்துக்காக சுஜாதா எழுதிய கதையை பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். கதை உரிமை என்னிடம் இருக்கிறது. எனது அனுமதி இல்லாமல் அந்நியன் படத்தை ரீமேக் செய்வது சட்டத்துக்கு புறம்பானது.

அந்நியன் படத்துக்கு முன்னால் உங்கள் படமான பாய்ஸ் சரியாக போகாமல் மன உளைச்சலில் இருந்த தங்களுக்கு அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்ததால் மீண்டு வந்தீர்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு தெரிவிக்காமல் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக அறிவித்து இருக்கிறீர்கள். அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் டைரக்டர் ஷங்கர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும், அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

ஒரு தயாரிப்பாளராக, அந்நியன் படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com