

முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது முல்லை பெரியாறு அணை பகுதியில் கனமழை பெய்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து நடிகர் பிருதிவிராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கிவைத்து சரியானதை செய்வதற்கான நேரம் இது'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிருதிவிராஜ் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேனியில் பிருதிவிராஜ் உருவபொம்மையை எரித்தனர். பிருதிவிராஜை தமிழ் படங்களில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று அரசியல் கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர்.
எதிப்பு காரணமாக பிருதிவிராஜை தமிழ் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் கே.ராஜன் கூறும்போது, பிருதிவிராஜ் தமிழ் படங்களில் நடித்து தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிவிட்டு கேரளாவில் உட்கார்ந்து முல்லை பெரியாறு அணை பலகீனமாக உள்ளது என்று கருத்து சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவரை தமிழ் நாட்டில் உள்ள நடிகர்கள் கண்டிக்க வேண்டும் என்றார்.