

மும்பை,
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'துரந்தர்' படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.
அதனை தொடர்ந்து, 'துரந்தர்' படத்தின் 2-ம் பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மாதம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதன் வசூல் ரூ.1,800 கோடியை தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் 'ஜமீல் ஜமாலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ராகேஷ் பேடிக்கு பாராட்டுகள் குவிகிறது. ரன்வீர் சிங், ஒரு மேடையில் இந்த படத்தின் வெற்றிக்கு ராகேஷ் பேடி தான் பெரும் பங்கு என்று கூட குறிப்பிட்டிருந்தார். துரந்தர் படத்தின் 2 பாகங்களுக்கும் சேர்த்து, ராகேஷ் பேடிக்கு சம்பளமாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் படத்தின் வெற்றி மற்றும் ஜமீல் ஜமாலி கதாபாத்திரத்துக்கு குவியும் பாராட்டு, ராகேஷ் பேடிக்கு தக்க சன்மானத்தை கொடுக்க செய்திருக்கிறது. சமீபத்தில் படக்குழு சார்பில் ராகேஷ் பேடிக்கு ரூ.1.4 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. இது பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.