

சென்னை
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இலங்கைப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனுவில், தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி, திருமணம் செய்வதாக கூறி, ரூ.70 லட்சம் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அந்த புகார் மனு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் விசாரிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடிகர் ஆர்யாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது நடிகர் ஆர்யா, தன் மீது கொடுக்கப்பட்ட புகார் தவறானது என்றும், ஜெர்மனி பெண்ணை யார் என்றே தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
இதனால் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையிலும், நடிகர் ஆர்யா சொன்னது உண்மை என்று தெரியவந்தது. நடிகர் ஆர்யா போல பேசி, ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த நபர் யார் என்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான் என்பவர்தான், ஜெர்மனி பெண்ணிடம் நடிகர் ஆர்யா என்று தன்னை சமூகவலைதளம் வாயிலாக அறிமுகப்படுத்திக்கொண்டு பழகி, திருமண ஆசைகாட்டி ரூ.70 லட்சம் பணத்தையும் சுருட்டியது தெரியவந்தது. இதன்பேரில் முகமது அர்மான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட முகமது அர்மானின் உறவினர் முகமது ஹூசைனி என்பவரும் கைதானார். ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்த பணத்தை அவர்களிடம் இருந்து மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.