

விஜய் நடித்த ‘புதிய கீதை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமிஷா படேல். தொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான அமிஷா படேல் 50 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். பாலிவுட்டில் இளம் நடிகைகள் போலி பப்ளிசிட்டி மூலம் சூப்பர் ஸ்டார் பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக சாடியுள்ளார். சினிமாவில் போலியான பப்ளிசிட்டி மூலம் தங்களை முன்னிலைப்படுத்தும் போக்கு நடிகர், நடிகைகளிடையே இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அது தொடர்பாகத் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை அமிஷா படேல், “பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களைக் கொடுத்திருந்தால் உங்களை சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக் கொள்ளுங்கள். அதுவரை, சூப்பர் ஸ்டார் என்கிற விளம்பர விளையாட்டு விளையாடுவதை நிறுத்துங்கள். மன்னிக்கவும், ஆனால் இதுதான் கசப்பான உண்மை. தங்கள் திரை வாழ்க்கையில் ஒரு தனி பிளாக்பஸ்டர் படம் கூட கொடுக்காத ஏராளமான நடிகைகள், வருடத்துக்கு 2 சாதாரணப் படங்களில் நடித்து, சில படப்பிடிப்புத் தளங்களில் இருப்பதால், தங்களை நட்சத்திரங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு படம் கூட பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிக்காத பெரும்பாலான நடிகைகள், தங்களை நம்பர் 1 மற்றும் நம்பர் 2 என்று அழைத்துக்கொள்ள விளம்பரக் குழுக்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இது 2026-ம் வருடம். ரூ.100 கோடி வசூல் கூட இன்று பெரிய விஷயம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். அமிஷா படேலின் இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.