

சென்னை,
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பிரச்சினையை சுமுகமாக பேசி முடிக்க ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாததால் ரஜினியின் காலா உட்பட 37 படங்களின் படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், பட அதிபர்கள், பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று 'வேலைநிறுத்தம்'. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள் இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.