'புரோமோசனுக்கு வர ரூ.3 லட்சம்...அவரின் கண்டிஷன்களையெல்லாம் கூறினால் சர்ச்சையாகிவிடும் - தயாரிப்பாளர்

image courtecy:instagram@abarnathi_6ya
'நாற்கரப்போர்' திரைப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
சென்னை,
சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றார்.
இதையடுத்து அபர்ணதி `இறுகப்பற்று' படத்தில் கடைசியாக நடிந்திருந்தார். தற்போது இவர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் நடிகையாக 'நாற்கரப்போர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நேற்று இப்படத்தின் புரோமோசன் பணியில் படக்குழு ஈடுபட்டது. அப்போது பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகை அபர்ணதியை கடுமையாக சாடினார். இது குறித்து அவர், நடிகை அபர்ணதி இந்த புரோமோசன் நிகழ்ச்சிக்கு வர ரூ.3 லட்சம் கேட்டதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு வர பல நிபந்தனைகள் விதித்ததாகவும் அதையெல்லாம் கூறினால் சர்ச்சையாகிவிடும் என்று கூறினார். பின்னர் நடிகையே தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.
மேலும் அவர், இப்படிப்பட்ட நடிகை சினிமாவுக்கு தேவையா? என்றும் திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தால் நல்லது என்றும் கூறினார். இவரின் இந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'நாற்கரப்போர்' அடுத்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






