“கருப்பு” படத்தின் “கருப்பசாமி” பாடல் உருவான பின்புலத்தை பகிர்ந்த சூர்யா

‘கருப்பு’ படம் பண்ணலாம் என்ற முடிவை எடுக்க வைத்த கருப்பசாமிக்கு நன்றி என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
“கருப்பு” படத்தின் “கருப்பசாமி” பாடல் உருவான பின்புலத்தை பகிர்ந்த சூர்யா
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே, ‘கருப்பு’ படம் உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமன்றி உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘கருப்பு’. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதன் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தமிழகம் முழுக்க திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடி வருகிறார். நீண்ட இடைவெளி கழித்து கிடைத்துள்ள இந்த பிரம்மாண்டமான வெற்றியை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடினார் சூர்யா.

அப்போது சூர்யா பேசும்போது, “கருப்பு படம் பண்ணலாம் என்பது அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் எடுத்த முடிவு. சமீபமாக எந்தவொரு படமும் அவ்வளவு நேரத்தில் முடிவு எடுத்ததில்லை. அன்றைக்கு அந்த முடிவு சரியாக இருக்கும் என தோன்றியது. இது முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜி மீது வைத்த நம்பிக்கைதான். இந்த முடிவை எடுக்க வைத்த கருப்பசாமிக்கு நன்றி. இந்த வெற்றி ஆசைப்பட்டதுதான். ஆனால், எதிர்பாராத இவ்வளவு பெரிய வெற்றி கொடுத்த அனைவருக்கும் நன்றி. திரையரங்குகளில் நீண்ட நாட்கள் கழித்து இந்தக் கொண்டாட்டத்தையும், அன்பையும் பார்க்கிறேன். தமிழகம் தாண்டி உலகளவில் கிடைத்துள்ள அனைத்து அன்பிற்கும் நன்றி. சில படங்கள் இப்படி இருந்திருக்கலாம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இந்தப் படத்தில் அனைவருடைய அன்பும் கிடைத்திருக்கிறது.

எனது உதவியாளர் கருப்பசாமி பாட்டு இருந்தால்தான் சரியாக இருக்கும் என்றார். அந்தச் சமயத்தில் படத்தின் எடிட் எல்லாம் முடித்துவிட்டோம். அதனைத் தொடர்ந்து 5 மாதங்கள் கழித்துதான் கடைசியாக நீங்கள் பார்த்த கருப்பசாமி பாடலை படமாக்கினோம். இதனை சொன்னபோதே பொருட்செலவு உள்ளிட்ட விஷயங்களால் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், சரியாக இருக்கும் என்று சொன்னதை இன்று அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்துக்கு அனைவரும் சேர்ந்து ஒன்று செய்துவிடலாம் என்று நினைத்ததை இன்று சந்தோஷமாக திரையரங்குகளில் காண முடிகிறது” என்று பேசினார் சூர்யா.

X

Daily Thanthi
www.dailythanthi.com