

சென்னை,
சமீபத்தில் வெளியான 'குபேரா' மற்றும் 'கூலி' திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நாகார்ஜுனா, அடுத்ததாக தனது 100-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 'நித்தம் ஒரு வானம்', 'ஆகாசம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'கிங் 100' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரை பல்வேறு வயது தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அதிநவீன டி-ஏஜிங் (De-aging) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடிக்கலாம் என்றும், இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் நடிகை தபு முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாகார்ஜுனா - தபு கூட்டணி மீண்டும் இணைகிறது என்பதும், அதிலும் தபு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எனினும், தபு இந்தப் படத்தில் நடிப்பது தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.