

ஐதராபாத்,
'பாகுபலி' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
46 வயதைக் கடந்துள்ள பிரபாஸ், இன்னும் திருமணம் செய்து கொள்ளாத முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இதனால், அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார், யாரை திருமணம் செய்து கொள்வார் என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபாஸ் அடுத்த ஆண்டு ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இதுகுறித்து நடிகர் பிரபாஸ் அல்லது அவரது தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த திருமண வதந்தியுடன் சேர்த்து, தனது வருங்கால மனைவிக்காக ஐதராபாத்தின் உயர்தர பகுதியில் சுமார் ரூ.200 கோடி செலவில் அரண்மனை போன்ற பிரம்மாண்ட வீட்டை பிரபாஸ் கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கும் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
பிரபாஸின் திருமணம் குறித்து இதற்கு முன்பும் பலமுறை தகவல்கள் வெளியாகி பின்னர் அவை வதந்திகளாகவே முடிந்துள்ளன. இந்த முறையும் பரவி வரும் தகவல் உண்மையா அல்லது வழக்கம்போல வதந்தியா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.